Tuesday, May 7, 2013

பயணங்களில் கண்டவை...

பயணங்கள் என்றுமே பாடங்கள்தான்...

ஒவ்வொரு பயணத்திலும் நிறைய அறிந்து கொள்ளலாம்... நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் கவனித்தால் அறிந்து கொள்ள ஆயிரம் தகவல்கள் கிடைக்கும்...

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது நிறைய பயணங்கள் செய்ய வேண்டியிருந்தது... மின்வெட்டிலிருந்து தப்பிக்க எதாவது ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பதும் ஒரு இன்பமான செயலாக இருந்தது... ஆனால் பேருந்து கட்டண உயர்வு கொஞ்சம் சிந்திக்க வைத்தது... பேருந்து கட்டணம் என்றில்லை எல்லாமே விலை உயர்ந்து இருக்கின்றது...

கடும் வெப்பமும் மின்வெட்டும் இணைந்து மிரட்டுகின்றது... மின்வெட்டு மக்களிடையே சகிப்புத்தன்மையை கூட்டியிருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார்... அதுவும் உண்மைதான்...மின்சாரம் இன்றியும் வாழ முடியும் என்று மக்கள் வாழ்க்கையைப் பழக்கி கொண்டிருக்கிறார்கள்... கணிசமான அளவில் வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்தியிருக்கிறார்கள்...

பயணங்களில் கண்டவை...


ஒரு நகரத்திற்குள் / ஊருக்குள் செல்லும் போது சில வீடுகள் நம்மைத் திரும்பி பார்க்க வைக்கின்றன... இப்பொழுது புதிதாய் கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் அவர்கள் அடித்திருக்கும் வெளிப்புற நிறம்தான் அப்படி நம்மை இழுக்கின்றது...

கண் கூச வைக்கும் நிறங்கள்...




இந்தப் படத்தில் இருக்கும் எல்லா நிறங்களும், சில வீடுகளின் வெளிப்புறச் சுவரில்  நிறங்களாக அடித்திருப்பதைப் பார்த்தேன்... என்னானு கேட்டப்ப வாஸ்து நிறம்னு நண்பர் சொன்னார்... உண்மையானு தெரியல... ஆனால் இந்த நிறங்களால் அந்த வீடுகள் தனித்து தெரிகின்றன... 

நல்ல வெயிலில் இந்த வீடுகளை கொஞ்சம் நேரம் பார்த்தால், கண்ணுக்கு பாதிப்பு வருமோ என்று அஞ்சுகிறேன்... யாரு கண்ணும் பட்டுடக் கூடாதுனு கூட இந்த நிறங்களை அடித்திருப்பார்களோ என்ற ஐயமும் எனக்கு உண்டு. 

ஏதேனும் அறிவியில் காரணங்கள் கூட இருக்கலாம் :-)

சாய் பாபா: 


மாலை நேரத்தில் சாய்பாவிற்கு வழிபாடு செய்து விட்டு, படைக்கப்பட்ட  ஒரு தோசை / ஒரு அப்பம் வீட்டில் கொண்டு வந்து வைத்தால், காலையில் அது இரண்டு எண்ணிக்கையாக மாறி விடுகிறதாம்... ஒவ்வொரு வீட்டு வழிபாடு முடியவும் மற்றொரு வீட்டிற்கு தோசையோ அப்பமோ எடுத்துச் செல்லப்படுகின்றது... பின்பு மறுநாள் அது இரட்டிப்பானதாக பெருமையாகவும் பக்தியாகவும் பேசிக்கொள்கிறார்கள்...

எங்க வீட்டுல இரண்டா மாறிடுச்சுல்ல.... அவுக வீட்டுலயும் இரண்டா மாறிடுச்சாம்... என்று ஆங்காங்கே சிலர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன்...

நத்தம் என்ற ஊருக்குச் செல்லும் வழியில், ஓரிடத்தில், முச்சந்தியில் இருந்த பிள்ளையார் சிலையை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க போல... பிள்ளையாருக்குப் பதிலாக, யாரோ அங்கே பள பளவென சாய்பாபா சிலையை வைத்திருக்கிறார்கள்... சாய்பாவின் முன்னால் பிள்ளையாரின் மூஞ்சூரு வாகனம் இருந்தது.... அந்தச் சிறிய கோயிலின் எல்லாப் பொருட்களும் பழமையாகவும், சாய்பாபா மட்டும் புதிதாய் பளிச்சென்று இருந்தார்...

அழகர் கோயில் அருகில் உள்ள ஒரு சாய்பாபா கோயிலுக்கு சென்று வந்தேன்... ஜுனூன் தமிழில் அழகான சாய்பாபா பாடல்கள் நிறைய பாடி, கடைசியில் ”ஜெய் சாய்நாத் மஹராஜ்கி” என்று எல்லோரும் வலது கையைத் தூக்கிக் காட்டி வழிபாட்டை முடித்தார்கள்...

அது மட்டுமல்ல, ஆங்காங்கே நிறைய சாய்பாபா கோயில்கள் முளைத்திருக்கின்றன....  ஷீரடி சாய்பாபா மெல்ல நம்ம பக்கம் வந்திக்கிட்டு இருக்கார் போல...

ஐயங்கார் டீ,காபி & கேக் ஷாப்


சேலத்தில் இருந்து மதுரை வரும் வழியில் பல இடங்களில் இந்தப் பெயருள்ள கடைகளைக் கண்டேன்... ஒரே மாதிரியான பெயர்ப் பலகை... விளக்கு வடிவமைப்புகள்... ஆனால் இந்தக் கடையில் இறங்கி போய் என்னா எப்படி இருக்குனு சாப்பிட்டு அறிந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை....


VKC Pride காலணிகள்:



நான் கவனித்த மட்டில், என் கிராமத்திலும், என் நகரத்திலும், மதுரை மாநகரத்திலும் பெரும்பாலானோர் அணிந்திருந்த காலணிகள் VKC Pride காலணிகள்...
அடேங்கப்பா... யார பாத்தாலும் இந்தச் செருப்புதான் போட்டிருந்தாங்க...

கேரளா கம்பெனினு கேள்விப்பட்டேன்...


அதே சென்னை ஆனா குழப்புது


அதே சென்னைதான்... அதே விரைவான மக்கள்தான்... ஆனா ரொம்ப நாட்களுக்குப் பிறகு சென்னைக்குச் சென்றால் கொஞ்சம் குழம்பிப் போவோம்...  


இயல்பாகவே இருக்கும் போக்குவரத்து நெரிசலும் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசலும் சேர்ந்து கொஞ்சம் படுத்துகிறது... 

சாலையில் சில தடுப்புகளும், மாற்றுப் பாதைகளும் இருப்பதால், பயணத்தின் போது எந்த இடத்தில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் என்று உடனடியாக கணிக்க இயலவில்லை..

சில இடங்களுக்கு செல்லும் பாதையை ஒரு வழிச்சாலையாக மாற்றியிருப்பதால் , குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு ஆகும் ஆட்டோ கட்டணத்தை விட, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே  திரும்பி வருவதற்கு முன்பை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவே ஆட்டோ கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது... ஏங்கனு ”கேட்டா, சுத்தி போகணும் சார் - இது ஒன்வே சார்” ங்கிறாங்க... நியாம்தான்...

சென்னை ஆட்டோக்களுக்கும் மற்ற மாநிலங்கள் போல எப்பொழுது மீட்டர் கட்டணம் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை...

என்ன இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் சென்னையல்லவா... வாழ்க சென்னை....


Monday, May 6, 2013

இப்ப அதுவே பழகிடுச்சு....

ஓராண்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நம்மூருக்கு விடுமுறைக்காக சென்று வந்தேன்...

எங்கூருல அதே மக்கள்தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் செயல்பாட்டில் பல மாற்றங்கள்... ரொம்ப திட்டமிட்டு செயல்படுகிறார்கள்... எல்லா பாராட்டும், நன்றியும் தமிழக மின்வாரியத்திற்கே சேரும்...



சித்தப்பா இப்ப கரண்டு போயிரும்.... சொன்ன மாதிரியே டான்னு கரண்டு போயிருது... 

மாப்ள இப்ப கரண்டு வந்துரும்டா... சொன்ன மாதிரியே டான்னு கரண்டு வந்திருது... 

அனைவருக்கும் தெரிந்திருக்கிறது கரண்டு எப்ப போகும் எப்ப வரும்னு... சில நேரங்களில் நேர மாறுதல்களும் செய்யப்படுகிறது... ஆகா நேரத்த மாத்திட்டாய்ங்களே... இன்னைக்கு 10 மணிக்கு போயிருச்சா, அப்ப 12 மணிக்குத்தாண்டா வரும்... என்று முடிவுசெய்து கொள்கிறார்கள்...

நேர மேலாண்மை, நேரந்தவறாமை என எல்லாத்தையும் தமிழக மின்வாரியத்திடம் கற்றுக் கொள்ள உலகின் பல பகுதிகளில் இருந்து ஆட்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... அவ்ளோ செம்மையாக செயல்படுகிறார்கள்...

12 மணி நேரம் 14 மணி நேரம்னு மின்சாரம் இல்லாத நேரங்களே, ஒரு நாளில் மிகுந்து இருக்கின்றது....

தமிழக மக்கள் வாழ்க்கை முறையும், தொழில்களும் மின்சாரத்தின் இருப்பைப் பொறுத்து மாறியிருக்கின்றது...

எடுத்துக்காட்டாக... ஒரு ஜெராக்ஸ் எடுக்கப்போனால், அங்க ஒரு போர்டு வச்சிருக்காங்க... மின்சாரம் இருந்தால் 1 ரூபாய், மின்சாரம் இல்லாவிட்டால் 2 ரூபாய் என்று... ஆக, பல தொழில்கள் மின்சாரம் இருந்தால் ஒரு விலை இல்லாவிட்டால் ஒரு விலை என்றாகி விட்டாது...

மின்சாரம் இருக்கும் போது செய்ய வேண்டிய வேலை, இல்லாத போது செய்யவேண்டிய வேலை என மக்கள் அழகாக திட்டமிட்டு செயல்படுகிறார்கள்... வேற வழியில்லையே....  

இன்னைக்கு சட்னிலாம் கிடையாது... கரண்டு வர இரண்டு மணி நேரம் ஆகும்.. பொடிய தொட்டுச் சாப்பிட்டுப் போங்க...  என அன்றாடஉணவு முறையைக் கூட மின்சாரம் தீர்மானிக்கிறது...  துணி துவைக்கிறது, முகச்சவரம் செய்வது, உணவு சமைப்பது, குளிப்பது என எல்லாவற்றையும் மின்சாரம் இருக்கும் நேரமே இப்பொழுது தீர்மானிக்கின்றது...

இன்வெர்ட்டர் விற்பவர்களுக்கு இது ஒரு அறுவடை காலம் என்றே சொல்லலாம்... இப்பொழுதெல்லாம் வரதட்சணையாக இன்வெர்ட்டரும் கேட்கிறார்கள் என்று நகைச்சுவைகள் வந்தன... அது உண்மையாகவும் இருக்கலாம்....

கடும் வெயில், இருக்கும் ஒரு சில மரங்களிலும் கொஞ்சம் கூட அசையாது நிற்கும் இலைகள், வெப்பம்... தாங்க முடியாத வெப்பம்... குழந்தைகள் பெரியவர்கள் என்றில்லை அனைவரும் படும் துன்பம் சொல்லி மாளாது... 

பழைய ஆட்சி மாறியதற்கு பல காரணங்கள் சொன்னாலும், உண்மையான, முக்கியமான காரணம் மின்வெட்டு... அதனால் ஆட்சி மீது மக்களுக்கு உண்டான வெறுப்பு...

கடந்த ஆட்சியிலிருந்து இந்த ஆட்சியின் தொடக்ககாலம் வரை, பல போராட்டங்கள் மின்வெட்டிற்காக செய்த மக்கள் இப்பல்லாம் மின்வெட்டிற்காக பெரிதாக எதும் போராட்டம் நடத்துவதாகத் தெரியவில்லை....


இன்றியமையாத அடிப்படைத் தேவை  மின்சாரம் ஆனால் அது இன்றியே இப்பொழுது மக்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பழகிவிட்டார்கள்...


கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம் இல்லாத நேரங்கள் மிகுந்து மிகுந்து, 
இப்ப அதுவே பழகிடுச்சு...