Thursday, September 22, 2022

ஆஃபினா - ருபினி - தெரிசை சிவா

தம்பிய ரொம்பப் பிடிக்கும்அமைதியான பையன், தன்மையான பேச்சுஅதிலும் நாஞ்சில் வழக்கு, பேசிக் கேட்க எனக்குப் புதுமையான ஒன்றுகொஞ்சம் குசும்பான முகம்.. எமது குழுமத்தில் உள்ள ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்களில் தெரிசை சிவாவும் ஒருவர்… 

முதல் நூல் குட்டிக்கோராவை ஆசிப் அண்ணன் சத்திரத்தில் 2018 டிசம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வொன்றில் சந்தித்த போது எனக்குப் பரிசாகத் தந்தார்ஒரு ஓய்வு நாளில் வாசிக்கத் தொடங்கியவன் முழுத் தொகுப்பையும் வாசித்து முடித்து பின்புதான் நூலை வைத்தேன்… 


நான் இதுநாள் வரை வாசித்த கதைகளில் மிகவும் ரசித்துச் சிரித்து மகிழ்ந்த கதைத் தொகுப்பு குட்டிகோரா என்னும் சிறுகதைத் தொகுப்புஇந்தச் சிறுகதைத் தொகுப்பை படித்த முடித்தபின் இந்தப் படைப்பாளியின் மீது அன்பும் நெருக்கமும் கூடிப் போனது…  

உடனே இந்தச் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஒரு பதிவெழுதினேன், பின்பு எமது குழுமம் சார்ந்து நடந்த விமர்சனக் கூட்டத்தில் விரிவாகப் பேசியிருந்தேன்… 

விரைவிலேயே தன்னுடைய அடுத்த படைப்பான திமில் நூலுடன் வந்தார்.. அதை நமது குழுமம் சார்பில் இயக்குநர் திரு. மனோபாலா அவர்கள் சூம் காணொளி வழியாக திமில் நூலை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தார்கள்வழக்கம் போல சிறப்பான நிகழ்வாக அது அமைந்தது

பொன்னுலஷ்மி கதையைப் பற்றி மிகவும் வியந்து பேசினார் திரு. மனோபாலா அவர்கள்அதில் வரும் இடுகாட்டு மோட்சம் என்ற கதையைப் படித்து விட்டு நான் சிரித்த சிரிப்பை நண்பர்கள் நன்கறிவார்கள்… 

இன்னமும் நண்பர்களிடம் பேசும் போது தம்பியைப் பற்றிய பேச்சு வந்தால் இடுகாட்டு மோட்சம் பற்றியும் முண்டன் தண்ணீருக்குள் முங்கிப் போயி மூச்சடைத்த கதையையும் நான் பேசாமல் இருந்ததில்லைஅவ்வளவு சிறப்பான கதை

இந்தச் சமூகத்தில் தன் முன்னால் நடக்கும் அத்தனையையும் கதைக்குள் கொண்டு வந்து ஆங்கே நகைச்சுவையும் கூடவே கருத்தும் வட்டார வழக்கில் சிறப்பாக வருமாறு கவனமாக கையாள்வார்எழுத்து இழுத்துச் செல்லும்…

இப்படியாக நல்லா எழுதிக்கிட்டிருந்த தம்பி, திடீர்னு வேற ஒரு அரிதாரம் பூசி, ருபினி என்றொரு புனைவு நாவலை அடுத்த படைப்பாகக் கொண்டு வந்தார்இதுவும் நன்றாகவே எழுதியிருக்கிறார்… 

வித்தியாசமான கதைக்களம்வேறொரு உலகம், வேறுபட்ட மனிதர்கள்வசியம், அமானுஸ்யம், சித்தர் பாடல்கள், நாடி ஜோஸ்யம் அது இதுனு எல்லாரும் கற்பனைகளையும் தூண்டிவிடும் வண்ணம் அருமையான எழுத்தில் ருபினி எனும் அழகிய நாவல்

மனுசன் என்னென்ன சிந்திக்கிறான் எப்படியெல்லாம் எழுதுறான் புதுசா ஒரு உலகத்தை எப்படியெல்லாம் எழுத்தில் படைக்கிறான் என்று வியந்து போனேன்… 

இந்நூலுக்கான விமர்சனக் கூட்டத்தை விரைவில் நடத்துவது என்று முடிவெடுத்து நமது ஆசிப் அண்ணன் அறிவித்தார்அவர் அறிவித்தவுடன் உடனடியாக அபுதாபி நண்பர்கள் இம்முறை அபுதாபியில்தான் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்… (அங்கு போனதும் மிரட்டினார்கள் என்பது வேறு கதை)

அபுதாபியில் விழா நடத்துவது என்று முடிவானதும், நமது அபுதாபியைச் சேர்ந்த விஜய் டிவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சிறுமி ஆஃபினாவிற்கு நமது குழுமம் சார்பில் பாராட்டு விழாவையும் சேர்த்து இருபெரும் விழாவாக நடத்தி விடலாம் என்று ஆசிப் அண்ணன், தம்பி ஃபிர்தௌஸ், நண்பர்கள் எல்லாம் கூடிப் பேசி முடிவெடுக்கவும் செப்டம்பர் 18ம் தேதி நடத்தலாம் என்று நாள் குறிக்கப்பட்டது…  




விழாவொன்று ஏற்பாடாகிறதென்றால் அதில் உள்ள சிக்கல்கள் பல… இடம் பொருள் ஆள் அம்பு சேனை எல்லாம் தேவைப்படும்… அவை சரியாக அமையணும்… அமைந்தது… ஏனெனில் அதன்பின் ஃபிர்தௌஸ் மற்றும் நண்பர்களின் உழைப்பு முக்கியமானது… அனைவருக்கும் பாராட்டுகள்…

அந்த நாளும் வந்தது, திட்டமிட்டபடி
செப்டம்பர் 18ம் தேதி அபுதாபியில் செட்டிநாடு உணவகத்தில் விழா… அழைப்பின் மகிழ்வில் குழுமம், அழைப்பை ஏற்று அபுதாபி வாழ் ஆன்றோர் சான்றோர் அனைவரும் வந்திருந்தார்கள்… முதல் நிகழ்வாக சிறுமி ஆஃபினாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது… அமீரக எழுத்தாளர் வாசகர் குழுமம் சார்பாக இளம் இசைக்குயில் பட்டமும் நினைவுப்பரிசும் மகிழ்ச்சியுடன் வழங்கினோம்… பின்பு எஃப் ஜே டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் சார்பாக நினைவுப் பரிசும், கேலக்ஸி புத்தங்கள் சார்பாக நினைவுப் பரிசும் மகிழ்ச்சியுடன் வழங்கினோம்…

 

சிரித்த முகத்துடன் அன்றலர்ந்த மலர் போல ஆஃபினா நமது நிகழ்வில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது, மகிழ்ச்சியாக இரண்டு பாடல்களையும் பாடினார்… இசைஞானியின் இசையில் ராசாவே உன்னை நம்பியும், திரு. இமான் அவர்களின் இசையில் கண்ணக் காட்டு போதும் பாடலும் பாடி எங்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்… என்ன குரல் என்ன திறமை… இறையருள் நிறைந்திருக்கிறது அந்தக் குழந்தைக்கு… அந்தக் குழந்தையின் இத்தகைய பெரும் வளர்ச்சியில்  பெற்றோர்களின் உழைப்பும் ஆதரவும் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அன்று நேரிலேயே பார்த்து உணர முடிந்தது, பயணம், கேள்வி பதில், மீடியா வெளிச்சத்தினால் ஏற்படும் சிக்கல்கள் என எல்லா எந்த அழுத்தமும் தங்கள் குழந்தையை முழுமையாக நெருங்கி நெருக்கி விடாமல் மிகவும் பக்குவமாகவும் கையாள்கிறார்கள், தனிமனித உயர்வுக்கு மிகவும் இன்றியமையாதது ”பணிவு” அதை மிக அழகாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்… பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்… இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் ஆஃபினா..

 

விழா முடிந்து நல்லதொரு சுவையான விருந்து உண்டுவிட்டு, கெடா வெட்டிற்கு அதாவது விமர்சனக் கூட்டத்திற்குத் தயாரானோம்… தொடங்கும் முன்பே சிரித்த முகத்துடன் சிவாவைப் போட்டோ எடுத்துக் கொள்வோம் என்று நகைச்சுவையாக் சொல்ல, ஏற்கனவே விழாவில் அமர்களப்படுத்திய சுபஹான் அண்ணனும், ஹபியும், ரியாஸும் தாங்கள் கற்ற மொத்த வித்தைகளையும் புகைப்படக் கருவியில் காட்டத் தொடங்கினார்கள்…

 

புதிதாக விமர்சனக் கூட்டம் பார்த்தவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அமைந்திருக்கும், என்னடா இது இப்படிப் பேசுகிறார்கள்? என்று.. ஆஹா ஓகோ அருமை என்ற பொய்ப் பாராட்டு விழாவாக அல்லாமல் வாசித்த அனைவரும் தம் மனதில் அப்படியே பேசுவதுதான் நம் குழுமத்தின் வழக்கம், வலு, சிறப்பு எல்லாம்…  அவ்வாறே அன்றும் மிகச்சிறப்பாக அவரவர் விமர்சனமும், பின்பு எழுத்தாளர் தம்பியின் மிகவும் பக்குவமான பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஏற்புரையும் இருந்தன… நண்பர்கள் மகிழ்ச்சியையும் வாசிப்பதற்கு புத்தகங்களையும் பரிமாறிக் கொண்டனர்… சிறப்பான நாளாக அமைந்தது…

 

தம்பி சிவாவைப் பற்றி இங்கே கொஞ்சம் எழுத வேண்டும்.. தன்னைப்பற்றி தானாக எதையும் சொல்லாதவர், நாமாகத்தான் ஓவ்வொன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்… ஒருநாள் ஓய்வாகப் பேசிக் கொண்டிருக்கையில்தான் அறிந்து கொண்டேன் தம்பி வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்… நன்றாகக் கவனிக்கவும் படித்து டாக்டர் வாங்கியவர்இலக்கியம் அவரது பெரு விருப்பம்… திரைத்துறையில் தடம்பதிக்கவுள்ளார்… தம்பிக்கு வாழ்த்துகள்…

 

எப்போதுமே எல்லா நிகழ்வுகளுக்கும் தவறாமல் வரும் தம்பி கௌசர் இந்த நிகழ்வில் வர இயலாமல் போனது எனக்கு கொஞ்சம் வருத்தமாவும், தம்பி ஞாபகமாகவும் இருந்தது…

 

பாராட்டுகள்:

ஒரு நிகழ்ச்சி என்றால் அதை எப்படி நடத்த வேண்டும் தொகுக்க வேண்டும் கலகலப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் எல்லோரையும் எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்தும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தும் வரும் அண்ணன் ஆசிப் மீரானுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டுகள்.

நிகழ்ச்சி நடத்துங்கள் என்று சொன்னதில்  இருந்து யார் யாரை அழைக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து மன நிறைவான விழாவாகச் செய்த தம்பி ஃபிர்தௌஸ்க்கு மகிழ்ச்சியுடன் பாராட்டுகள்… (இந்த கண்ணுலயே பேசுறது எப்படினு கத்துக் கொடுங்க தம்பி)

இருபெரும் விழாவைப் பால்க்கரசின் பிறந்தநாள் விழாவுடன் சேர்த்து முப்பெரும் விழாவாக மாற்றிய சிவசங்கரி குடும்பத்தார்க்கும் தம்பி ராஜாராமுக்கும் பாராட்டுகள்… பால்க்கரசின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இன்றும் என் நினைவில்…

 

நன்றி:

 

துபாயில் இருந்து அபுதாபி சென்று வர பயண ஏற்பாடுகள் செய்த எஃப் ஜே டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரியாஸ் அவர்களுக்கும்

காலைச் சிற்றுண்டி தேநீருடன் வண்டியில் ஏறிய அண்ணன் ரியாஸ் அவர்களுக்கும்

நினைவுப்பரிசுகள் பொன்னாடைகள் ஏற்பாடு செய்த தம்பி பிலால் அவர்களுக்கும்

உணவு மற்றும் அரங்கு அளித்த செட்டிநாடு உணவக நிர்வாகிகளுக்கும்

அழைப்பை ஏற்று விழாவிற்கு வந்த ஆன்றோர் சான்றோர்களுக்கும்

 

மாலை மிக இனிப்பாக ஃபில்டர் காபி வீட்டிலிருந்தே போட்டுக் கொண்ட வந்த சகோதரி மஹாலட்சுமி அவர்களுக்கும்

 

விதவிதமாக ஒவ்வொரு உணர்வுகளையும் படம்பிடித்து டிஜிட்டல் ஆவணமாக்கித் தந்த அண்ணன்கள் சுபஹான், ஹபி, ரியாஸ் ஆகியோருக்கும்

வண்டிக்குள்ள இருக்கிற அம்புட்டு தலைப்பிரட்டு டிரைவர்களின் எந்தப் பேச்சையும் கேட்காமல், தன் வழி தனி வழினு  எந்த வம்புதும்பும் பண்ணாமல்,

பத்திரமாக துபாய் – அபுதாபி – துபாய் ஓட்டிய பட்டான் டிரைவருக்கும்

 

எமது மனமார்ந்த நன்றிகள்… மகிழ்ச்சியான நாள்…

 

#யாவும்_நலம்

#ஆஃபினா

#ருபினி

#தெரிசை_சிவா

 

 

 

 

 

Thursday, July 28, 2022

பூவார் சென்னி மன்னன் - திருவாசகம் - இளையராஜா

பூவார் சென்னி மன்னன் - திருவாசகம் - இளையராஜா 

எவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தாலும் மனம் திடீரென தனிமைக்குக்கு ஏங்கும், தேடிச் செல்லும். நேரங்காலமின்றி ஓடித் திரிய வேண்டிய சூழல், அக புற அழுத்தங்கள்  எப்படா அக்கடானு உட்காருவோம்னு ஏங்கும் மனது;

இப்படியாக ஒவ்வொரு நாளும் தேடித் திரியும் போது மன ஓய்வுக்கு எங்காவது தலைசாய்த்து சற்றே ஓய்வெடுத்தால், அமைதிப்படுத்தினால் நலமென்று தோன்றும். இப்படியே தொடர்ந்து ஓடி கடமைகளில் மூழ்கி அவைகளை நிறைவேற்றுவதிலேயே பெரும்பகுதி செலவிட்டு இறுதி நோக்கிச் செல்லும் போது ஒவ்வொன்றாக அறுபடும்

பெரிதாக நினைத்தது, இன்றி அமையாததென்று நினைத்தது, போற்றிப் பேணிக் காத்தது எலலமே அதன் மதிப்பை இழக்கத் தொடங்கும்மனதில் அதற்காக உண்டாக்கி வைத்திருந்த பிம்பங்கள் எல்லாமே சிறிதாகிப் போகும், எதும் இல்லாமல் கூடப் போகும்என்ன வேணாலும் ஆகிக்கோ எனக்கொன்னும் கவலையில்லை, எல்லாம் அவன் செயல் என மெல்ல மெல்ல பற்றறும். அப்படியொரு நிலை, ஒரு நாள் எதற்கும் இறுதி எட்டும் போது உறுதியாக வரும்.

பற்றறுதல் ஆன்மீகத்தில் குறிப்பாக சைவத்தில் மிகவும் முக்கியமான கூறு. எளிதில் இயலாத செயல் என்றாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுவது பற்றறுத்தல். திருவாசகம் சைவத்தின் முத்துகளில் ஒன்று. ஐம்பத்தியொரு பகுதிகளையும் அறுநூற்றி ஐம்பத்தெட்டு பாடல்களையும் கொண்ட ஒரு பக்தி இலக்கியம் திருவாசகம். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மூதுரை வாக்கு. உண்மைதான். செய்யுள் ஓசையின் இனிமையும் இசையும் கேட்போரை பாடுவோரைத் தன்னிலை மறக்கச் செய்யும். திருவாசகத்தில் யாத்திரைப்பத்து என்ற தலைப்பு நாற்பத்தைந்தாவது பகுதியாக வருகிறது. எல்லாம் முடித்து கிளம்புவோம், அவனடி சேர்வோம் பயணத்திற்கு கிளம்புங்கள் என்று அழைக்கும் நோக்கில்  எழுதப்பட்ட பாடல்எல்லாம் துறந்து விட்டு பொய்யான இவ்வுலக வாழ்வை விட்டு, நம்மை உடையவனின் காலடியில் போய்ச் சேர்வோம் என்று அழைக்கும் பாடல்

யாத்திரைப் பத்து பாடல்களை முழுமையாகப் பொருள் உணர்ந்து அவற்றை உள்வாங்கிப் பாடும் போது நம்முள் இனிமையான ஒரு வெறுமை உண்டாகும்அது நம் சிந்தையைப் பக்குவப்படுத்தும். முடிவுகள் எடுக்கும் போது ஒரு பெருந்தன்மை உண்டாகும்

இப்படியாகப்பட்ட பாடலுக்கு இக்கால இசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இசையின் ராஜா இளையராஜா  திருவாசகத்திற்கு சிம்பொனி அமைப்பதற்காக ஆறு பாடல்களை எடுத்தாண்டிருக்கிறார். அதில் முதல் பாடலாக வருவது பூவார் சென்னி மன்னன் எனத் தொடங்கும் யாத்திரைப் பத்து பாடல். சிவபுராணம் சொல்லித் தொடங்கும் திருவாசகத்திற்கு சிம்பொனி அமைத்தை இளையராஜா ஏன் பூவார் சென்னி மன்னனிலிருந்து தொடங்கினார் என்று ஆராய்வோமானால் அவரின் ஆன்மீக முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறதுஇதைப் பற்றி இன்னும் நிறையவே பேசலாம் எழுதலாம்நிற்க.






பூவார் சென்னி மன்னன்பாடல் தொடங்கும் முதல் இசையாக பலமாக டம்மென கேட்கும் டிரம் இசை. முன்பு சொன்னது போல எத்தனை அழுத்தங்களால் நாம் இறுகியிருந்தாலும், இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கியவுடன் முதல் ஒலியிலேயே ஒன்னுமில்லப்பா பதறாத ஒக்காரு ஒக்காரு பாத்துக்கலாம் என்பதைப் போல ஒரு ஆறுதல்பேரிரைச்சலாக இருக்கும் வகுப்பறையில் ஆசிரியர் குச்சியை வைத்து மேசையில் அடித்ததும் நிலவும் பேரமைதி போல அந்த டிரம் இசை கேட்டவுவன் மனது தன்னுள் இருந்த இரைச்சல்களையெல்லாம் அடக்கி அமைதியை நோக்கிப்  பயணிக்கும்

தொடரும் பாடல் உங்களை முதல் பத்து நொடிகளாகத் தொடர்ந்து விழும் அடிகளில் ஓரளவுக்கு கேட்க ஏதுவான மனநிலைக்கு அமைதிக்கு மனது வந்து விடும். பின்பு அடுத்த இருபத்தைந்து நொடிகள் தொடரும் கோரஸ் ஒருமுகப்படுத்தும்கிட்டத்தட்ட மௌனம் சாத்தியமாகிவிடும்…  அதன் பின்பு இளையராஜாவின் குரலில் பூவார் சென்னி மன்னன் எனத் தொடங்கி அடுத்த ஏழரை நிமிடங்கள் செல்லும் பாடல் உங்களை ஈர்த்து மயக்கும்

காது கேட்கும் அளவிற்கு ஒலி அளவில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு இந்தப் பாடலைக் கேட்கத் தொடங்குங்கள்உங்களுக்குள் இருக்கும் இறுக்கங்கள் தளர்வதை உணர்வீர்கள்

தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் மாயம் இவைபோக

என நமை இளையராஜா இசையோடு இழுத்துச் செல்லும் போது கண்கலங்கினாலும் வியப்பில்லைஇசை மகத்தானது. பொருள் பொதிந்த இந்த திருவாசகப் பாடல்களுக்கு இசை அமைந்திருக்கும் ஒழுங்கு மனித கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நடந்த தெய்வச் செயலாகப் பார்க்கிறேன்.

”அடைவோம் நாம் போய்ச் சிவபுரத்துள்” என்று உயர்த்திப் போகும் போது நம் ஆன்மாவை உண்மையிலேயே பிரித்து சிவபுரத்திற்கு கொண்டு போய் விடுவாரோ என்று எண்ணத் தோன்றும்அப்படியான இசையும் பாடலும் குரலும்…

”புடைபட்டுருகிப் போற்றுவோம்” என்று இறங்கி வரும்போதுதான் நம் உடம்புக்குள் உயிர் திரும்ப வந்தடைவது போன்ற நெகிழ்வு கிடைக்கும்அதற்கடுத்து துள்ளி வரும் இசை கொஞ்சம் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதன்னிலை மறந்து மனம் துள்ளும்..

இருக்கிறவங்க இருக்கட்டும் நாம் கிளம்புவோம் என்பதை ”நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே” என்று வரும் போது நம் கைப்பிடித்து  இழுத்துச் செல்லும் உணர்வு; மாயை களைந்த பெருமகிழ்ச்சி

”பெறுதற் கரியன் பெருமானே” எனப் பாடி முடித்து பின்பு வரும் டிரம் ஒலி மீண்டும் மன ஒழுங்குக்கு கொண்டுவரும்… 

எனக்கு மிகவும் நெருக்கமான உயிரில் கலந்த பாடலும் இசையும் இதுவென்று சொல்வேன். எப்பொழுதெல்லாம் என் மனதின் சமநிலை கெடுகிறதோ, இல்லை மனது அலைபாய்கிறதோ, மனதிற்கு ஓய்வு தேவைப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒருங்கமைக்க, நிலைபெற இந்தப் பற்றறும் பாடலைக் கேட்பதுண்டு

#திருவாசகம்

#மாணிக்கவாசகம்

#இளையராஜா

#யாவும்_நலம்

#இசை

Friday, September 10, 2021

கீழக்குயில் குடி - ஓர் அனுபவம் - #ஊர்_ஞாபகம்

 ஊருக்கு வந்ததும் எல்லாரும் செய்வது போலனு சொல்லலாமானு தெரியல, ஆனா நான் செய்றது, முதல் வேலையா குலசாமியப் பாத்து கும்பிட்டு விழுந்துட்டு வந்திர்றது… அப்புறம் மத்த வேலையெல்லாம் தானா நடக்கும், நாள் போறதே தெரியாது… இந்த தடவையும் வந்ததும் நேரா எங்கள் சங்கையாவைக் கும்பிட்டுட்டு வந்ததும் அடுத்தடுத்த வேலைகள் மூன்றாண்டுகளாய்த் தேக்கி வைத்திருந்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விட்டேன்…

முதலில் நண்பர்கள் சந்திப்பு, பின்பு உறவினர்கள் சந்திப்பு… இந்தப் பயணத்தில் நல்லது, பெரும்பாலும் கெட்டது நடந்து வீடுகளுக்குச் சென்று விசாரித்து விட்டு வருவதே கொரோனா எனும் கொடுந்தொற்றின் தாக்கமாக இருந்தது… என்று முடியோமோ தெரியல…

கொஞ்சம் கையக் கால நீட்டி அக்கடானு ஒக்காந்ததும் அண்ணன் முத்துக்கிருஷ்ணனுக்கு போன் செய்தேன் அண்ணே உங்களைப் பாக்கணும்னு… உடனே சந்திப்பு ஏற்பாடு ஆகி, அண்ணன் வீட்டில் ஒரு மாலை வேளையில் நீண்ட நேர உரையாடல்… நிறையப் பேசினோம்… பேசினோம் என்பதை விட நிறையக் கேட்டேன் கேட்டேன்…  மதுரையில் தொடங்கி எங்கெங்கோ அழைத்துச் சென்றார்… அவ்வளவு தகவல்கள்… அவர் அறிந்து வைத்திருக்கும் தகவல்களையெல்லாம் சொல்லி விட போதுமானதாக சூம் மீட்டிங்குகள் இல்லை மாறாக அவரின் பேச்சைக் கட்டுப்படுத்துகிறது என்றே கருதினேன்… கொரோனா எல்லாம் போயி மக்கள் கூடும் நிலை வரும் போது, அமீரகத்திற்கு அழைத்து வந்து இவரைப் பேச வைக்க வேண்டும்… குழந்தைகள், நகர் வாழ் பெரியவர்கள் எல்லாரையும் கேட்க வைக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்…

தம்பி ஞாயித்துக்கிழம சமணர் மலைக்குப் போவோம் வாடான்னார்… சரிண்ணே என் மக்களோடு வந்து விடுகிறேன் என்று சொல்லிட்டு எத்தனை மணிக்கு என்று கேட்டேன்… அதிகாலை 5:45க்கு என்றார்… மேலூரிலிருந்து கிளம்பி கீழக்குயில்குடி சமணர் மலைக்குச் சென்றாகி விட்டது… அருமையான காலநிலை… அந்த அதிகாலைத் தென்றலோடு அங்கே காத்திருந்தார் அண்ணன் முத்துக்கிருஷ்ணன்… அவரோடு அவர் நண்பர் பட்டாளமும் அங்கே குழுமியிருந்தது… வாங்கப்பா மலை ஏறுவோம் என்று அழைத்துச் சென்றார்கள்…


 

ஆஹா…”காவல் கோட்டம்” படித்திருந்ததால் இந்த மலை ஏற ஏற பல ஞாபகங்களும், காட்சிகளும் கண் முன்னே விரிந்தது… ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மலை ஏறுபவர்கள் அவர்கள் குழாம், ஆகவே வெகு வேகமா முன்னேறிச் சென்றார்கள்… என்னதான் என்னைக் கிராமத்தான் என்று நானே அழைத்துக் கொண்டாலும், துபாயின் வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்ட என் உடல் அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை… பொறுமையாக நின்று நின்று அழைத்துச் சென்றார்… ஒவ்வொரு இடமாக நிறுத்தி அவற்றின் பெயர், வரலாற்றுச் சிறப்புகள் எல்லாம் சொல்லி, புது அனுபவம் தந்தார்… இது பற்றி ஏற்கனவே படித்திருந்த எனக்கும், இது எதும் தெரியாமல் முதன் முதலாக இப்படி ஒரு அனுபவம் கிடைக்கப் பெற்ற என் பிள்ளைகளுக்கும் மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது…

 மலை உச்சியில் நின்று கொண்டு சூரிய உதயத்தைப் படம் எடுக்கக் காத்திருக்கையில், கீழக்குயில்குடியின் ஏதோவொரு வீட்டில் சத்தமாக வைக்கப் பட்ட ரேடியோவில் இருந்து “முத்துமணி மாலை என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலட்ட” என பாட்டு… காற்றும் தன் பங்கிற்கு இசைஞானியோடு இணைந்து பாட்டின் ஒலியைக் கூட்டியும் குறைத்து எங்களுக்கு கேட்க வைத்து இசை விருந்து படைத்துக் கொண்டிருந்தது… நண்பர்களிடம் சொன்னேன், தமிழ் மண் பரப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு வீசும் காற்றிலெல்லாம் ராசாவின் இசை கலந்திருக்கும்… நம் வாழ்வியலின் பின்னனி இசை ராஜாதானே…



முத்துக்கிருஷ்ணன் அண்ணன் நல்ல படக்கலைஞரும் கூட… சூரிய உதயம் தொடங்கி நிறைய படங்கள் எடுத்து பிரமிக்க வைத்தார்… ரசித்து ரசித்துப் படம் எடுத்தார்… பழக்கப் பட்ட இடம் போல அவர் மலை உச்சியில் பின்னால் நடந்தெல்லாம் படம் எடுக்கும் போது, அண்ணே பாத்துனு சொல்லவேண்டும் போல பதட்டமா இருந்தது…



சமணர் படுகை, சிற்பங்கள், கண் இமை, தமிழி எழுத்துகள் என ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கி பேச அங்கே அவர் நண்பர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்…குறிப்பாக சர்வேஷ் சரவணன் என்கிற சின்னப் பையன் எங்கள் கூடவே வந்து ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விளக்கிச் சொன்னார்… தம்பிக்கு என் முத்தங்கள்… ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டு அந்த அருமையான காற்றோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது மனதுக்கு உற்சாகம் தரும்… கொஞ்சம் அசை போட்டால் மதுரை வரலாற்றுப் பக்கங்களில் சில கண் முன்னே விரியும்…





அண்ணே பசிக்குதேண்ணே என்றேன்… இருப்பா மலை இறங்கினதும் அதற்குண்டான வேலையைச் செஞ்சிரலாம் என்றார்… மலை இறங்குதல் இன்னும் என்பது இன்னும் சாதனையான செயலாக இருந்தது… சரவணன் அண்ணன் மட்டும் இல்லையென்றால் ரொம்பவே கதறியிருப்போம்… பாறையிடுக்கில் இறங்குகையில் எங்கள் கால்களை அவர் கைகளில் தாங்கி சறுக்கி வரச்சொல்லி பத்திரமாக இறக்கி விட்டார்… நீங்க நல்லா இருக்கணும்ண்ணே என்று வாழ்த்தி இறங்கினேன்…


வரும் வழியில் பேச்சிப் பள்ளத்தில் சமணர் சிற்பங்கள் முன்பு எனக்கு இரண்டு புத்தங்களை வழங்கினார்… திரு. ஆர். பாலகி
ருஷ்ணன் எழுதிய ”சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” மற்றும் ”சங்கச்சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக” ஆகியன… இதுவும் அன்றைய நாளின் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு…

 


மலை இறங்குதல் பெரும் சவால்தான்… எல்லோரும் இறங்கிப் போய்விட, கடைசி ஆளாகத்தான் ஒருவழியாக இறங்கி வந்தேன்… வந்தது முத்துக்கிருஷ்ணன் அண்ணன் வடையோடு வரவேற்றார்… இங்கே ஜெயமணி அம்மாளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்… பல்லாண்டு காலமாக இங்கே சிறிய கடை நடத்தி வருகிறார்… இங்கே வருபவர்கள் பசியாற்றுபவர் இவர்தான்… முத்துக்கிருஷ்ணன் அண்ணன் எழுதிய ”மதுரை வரலாறு” நூலை இங்கு எழுத்தாளர் தொ.ப வெளியிட்ட போது அதைப் பெற்றுக் கொண்டு சிறப்புச் செய்தவர் ஜெயமணி அம்மாள்தான்… மதுரையைப் பற்றி அறிய வாங்கி வாசித்துப் பாருங்கள்… இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு எழுத்தாளர், வெளியிட்டவர் பெற்றுக் கொண்டவர் என மூவர்க்கும் பெருமையே…



கீழக்குயில்குடி அய்யனாரை கும்பிட்டு விட்டு, தாமரைக் குளத்தில் கால் நனைத்து விட்டு வந்தால், அண்ணன் தட்டு நிறைய வடைகளோடு நின்றிருந்தார்.. வடைகளைத் தின்று, இரண்டு டீயையும் குடித்து, வயிறு நிறைந்த பின்னர் அண்ணே கிளம்புறோம் என்று அனைவரிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்…



அங்கே கிடைத்த நண்பர்கள் ஊடகவியலாளர் வெற்றிதாசனுக்கும் மருத்துவர் ராஜன்னாவுக்கும் என் அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்… வெற்றிதாசனின் நகைச்சுவைப் பேச்சு ஏற்ற இறக்கங்களில் ஏற்பட்ட களைப்பிற்கு இளைபாறுதல் தந்தது… 




இந்த விடுமுறையில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், தொழில், வேலை பற்றிய எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் வெறும் மனுசனாக ரொம்ப இயல்பா மகிழ்ச்சியாக இருந்த நேரங்கள் என்று கீழக்குயில்குடிப் பயணத்தைச் சொல்லுவேன்… அதற்கான அருமையான இந்த வாய்ப்பை எற்படுத்தித் தந்த அண்ணன் முத்துக்கிருஷ்ணனுக்கு என் மகிழ்ச்சியைம் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்…







என்ன இது, கீழக்குயில் குடி மலை மற்றும் அங்கிருப்பது எல்லாம் என்னவென்று நிறைய எழுதியிருக்கலமே, ஏன் எழுதவில்லை என்று நினைக்கலாம்.. அதான் ஏற்கனவே பலர் எழுதிவிட்டார்களே; மேலும் இணையமெங்கும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன….

இந்தப் பயணம் ஒரு அனுபவம்; அதை நீங்ளே போய்ப் பார்க்கவேண்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்… இந்தப் பதிவைப் படித்தவர்கள் மதுரை சென்றால் அண்ணன் முத்துக்கிருஷ்ணனைப் பாருங்கள்… சுற்றுலா செல்ல விரும்புவகர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்… அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம்… அந்த இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கு வாழ்நாளுக்கான ஒரு நல்ல ”ஞாபகத்தை” பரிசாக அளிப்பார்… நல்ல படங்களாகும் ஞாபகங்களாகவும் என்றும் அது உங்கள் நினைவில் நிற்கும்… அது உறுதி…





மகிழ்ச்சி..

Friday, September 11, 2020

பயணம்

ஒரு கடுங் கோடை காலத்தில் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் டெல்லியில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நோக்கிய பயணம் 

ஏற்கனவே நிறைய பயணங்கள் செய்து  அனுபவம் இருந்திருந்ததால் பயணத்திற்கு அதிக சுமை இல்லாமல் சிறிய பை மட்டும் வைத்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தேன்

தொலைவான பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டி வரும் கடந்த முறை பார்த்ததில் சிலது இந்த முறை இருக்காது ஆனாலும் சிலது எத்தனை முறை சென்றாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அங்கேயே இருக்கும் பயணித்துப் புரிந்து கொள்ளுங்கள்

தொலைவான இரயில் பயணங்களில் மிகவும் வியப்பானவை அந்த புதுப்புது மனிதர்கள் முதலில் யாரோ எவரோ என்று பார்த்துப் பின்பு ஓரளவுக்கு நன்றாகப் பேசிப் பழகத் தொடங்கி விடுவது 

இந்த இரயில் பயணங்களில் எனக்குச் சிக்கலாகப் படுவது வெப்பம் மற்றும் கழிப்பறை வெப்பம் வேறு வழியேயில்லை அதுவும் மதிய நேரங்களில்  ஓடும் இரயில் அனல் காற்றில் ரெசின் இருக்கைகள் கொதித்து கொடுமையாக இருக்கும் உறங்கவும் முடியாது வேர்த்து ஊத்தும் தலைவலிக்கும் இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், ஓடும் வண்டி இந்த வெயில் நேரத்தில் எங்காவது நின்று விட்டால் நரக வேதனைதான் நிறைய அனுபவப்பட்டிருக்கேன்

மொத்த இரயிலையுமே ஏசியாக்கினால் கூட ஒன்றும் அவ்வளவு செலவாகாது என்று நினைக்கிறேன் அறிஞர்கள் அறிவார்கள், அரசியலாகக் கூட இருக்கலாம்

கழிப்பறை ஐயோ அது ஆகக் கொடுமை வண்டி ஆடிக்கிட்டே போறதுன்னால அங்கிட்டு இங்கிட்டும் கொஞ்சம் அப்படி இப்படி சிதறத்தான் செய்யும் அதுக்கேத்த மாதிரி பெரிய ஹோஸ் பைப் எதாவது வைச்சிருந்தா ஒருவேளை தூய்மைப் படுத்த நினைக்கிறவன் கொஞ்சம் தண்ணி அடிச்சு தூய்மைப்படுத்திட்டு வருவான் இவய்ங்க வச்சிருக்கிறது ஒரு குமிழ மேல தூக்கினா தண்ணி வர்ற மாதிரி ஒரு அமைப்பு, அதை ஒரு குவளைல புடிச்சு கழுவிட்டு வரணும் கடவுளே, அதை வச்சு நம்மத கழுவிட்டு வர்றதே பெருசு இதுல் எங்கிட்டு கழிப்பறைய தூய்மையா வச்சிட்டு வர்றது 

நான் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை இதற்கென்றே வைத்துக்கொள்வது எனென்றால் அந்த கால்படி குவளையில், நான்கைந்து முறை வண்டி ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் பிடித்து கழுவி முடிப்பது கடினம் அல்லவாமுன்பு ஒரு நகைச்சுவை கூட வந்துச்சு இணையதளத்துல, Dear Railway, please extend that chain, because it does not reach the place where it supposed to என்று இந்தக் கொடுமைகள் இரண்டும் இரயில் பயணங்களில் பெரும் கொடுமைகள் 

இதைத் தவிர்த்து இரசிக்க ஆயிரம் ஆயிரம் உள்ளன, அதை அனுபவிக்க பயணித்தே ஆக வேண்டும்... ஒவ்வொரு ஊரும் கடக்கையில் புது ஊர் வாசம் மண், நிறம்,மனிதர்கள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...குளிர்காலப் பயணங்கள் கொள்ளை இன்பம்... மழைக்காலங்களில் ஒழுகாத இரயில் கிடைத்து விட்டால் இன்னும் இன்னும் இன்பமே.... இரயிலில் பயணித்தால்தான் அந்த இன்பத்தை உணர முடியும்...

போபால் இரயில் நிலையத்தில் அப்போது இருந்த பெரிய குளியல் அறை தூய்மையாக இருந்து, ரொம்ப பிடித்திருந்தது அந்தக் க்ளாக் ரூமில் உடைமைகளை வைத்துவிட்டு, குளித்து விட்டேன்... அங்கிருந்து இந்தூரர் என்ற ஊருக்குச் செல்லவேண்டும் போக்குவரத்து என்ன வழி என்று உடைமைகள் காப்பாளைரைக் கேட்டால் 

நீ மதராஸியா

ஆமாம் 

இஞ்சினியரா? (இட்லி விக்க வந்தியானு கேட்கலை) 

ஆமாம்

எதாவது கார் நிற்கிறதா என்று பாருங்கள் என்று சொன்னார், உடைமைகள் காப்பாளர் 

ஏன் பேருந்து இல்லையானு கேட்டேன் இருக்கு அதெல்லாம் சரியா இருக்காது, அதோட உங்க நேரத்துக்கெல்லாம் கிடைக்காதுன்னார்அந்த நேரத்தில் என் கிராமத்திற்குள் மினி பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று சொல்ல  எனக்கு நேரமில்லை...

உடனே கம்பெனிக்கு ஃபோன் பண்ணி, ஐயா, இதான் நிலைமை நாளைக்கு நான் ஊதாரித்தனமா செலவு செஞ்சேன்னு சம்பளத்துல பிடிச்சிராதீங்கன்னு கார்ல போறதுக்கு உத்தரவு கேட்டேன், அவங்களும் சரி கார் ஷேரிங்னா பரவாயில்லனுட்டாங்க

போபால் இரயில் நிலையம் வெளியே வந்து ரோட்டி, தால் ஃப்ரை, ஹரி மிர்ச்சிய சாப்பிட்டு அந்த உணவகத்திலேயே இந்தூருக்குச் செல்லவேண்டும் என்றதும் அவர் ஒரு இடத்தைக் காட்டினார் அங்கே நிறைய கார்கள் நின்றிருந்த ஆனால் டாக்ஸி மாதிரி இல்லை ஓன் போர்டு கார்கள்தான் ஆனால் நான்கு பேர் சேர்ந்ததும் போபாலில் இருந்து இந்தூர்க்கு அழைத்துச் செல்கிறார்கள் 180 கிலோமீட்டர் தொலைவு என்று நினைக்கிறேன்

அது ஒரு நெடிய பயணம் ஓட்டுநருக்கு அடுத்த இருக்கை கொடுத்து விட்டார்கள் ஒருவேளை இஞ்சினியர் என்று மதித்ததால் இருக்கலாம்... போகும் வழியெங்கும் பேச்சு மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார், நேரு, திலகர், போபால் விசவாயு கசிவு எல்லாம் பேசி அன்றைய அரசியல் வரை பேச்சு. இடையே உணவுக்கு மட்டும் ஓரிடத்தில் நிறுத்தம்அவர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய எந்த ஒரு தெற்கத்திய அரசியலோ வரலாறோ அவர்களுக்குக் காட்டப்படவேயில்லை என்று நன்றாகவே தெரிந்தது அவர்களிடம் நாம் பாரதியார், சி, கட்டபொம்மன், மருது பாண்டியர், வாளுக்கு வேலி என்று பேசத் தொடங்கினால் க்யா ஹே, அதெல்லாம் ஸ்வீட்டா காரமா என்றூ கேட்கும் அளவில்தான் அவர்கள் வரலாற்று அறிவு இருக்கிறது...  நாம் மட்டும்தான் வடநாட்டு வரலாறு படித்து வந்திருக்கிறோம் 

 ஒருவழியாக இந்தூர் சென்றடைந்தும் இடுப்பு கழன்று விடும் போலிருந்தது அந்தக் கார்ப் பயணம் இந்தூரில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியான வேலை வேலையெல்லாம் முடிந்து விட்டது மீண்டும் டெல்லி கிளம்ப வேண்டும்  போபால் செல்வதற்கு போபாலிலிருந்து கூட்டி வந்த காரோட்டியை அழைத்தேன், திரும்ப போபால் போவீங்களா, இல்லை உங்கள் நண்பர் யாரும் போவாங்களா? என்னைக் கூட்டிப் போக முடியுமா? என்று அவரே செல்ல இருப்பதால் என்னை அழைத்துச் செல்ல ஹோட்டலுக்கு வந்தார் 

சார் தமிழ்நாடுல நீங்க எங்கே என்றார் மதுரை என்றேன் 

மதுரையா

ஆமாம், ஏன்

இங்கே அன்னபூர்ணா கோயில் தெரியுமா

தெரியாதுப்பா 

சார் உங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல இருந்து பிடி மண் கொண்டாந்து கட்டுன கோயில்தான் இந்தூர் அன்னபூர்ணா கோயில் என்றார் 

அப்படியா மகிழ்ச்சிப்பா சரி போபால் கிளம்பலாம் என்று வண்டியில் ஏறினேன்...

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் என்று ஊரில் இருக்கும் அன்னபூர்ணா கோயிலுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக அறிந்தது வியப்பான தகவலே... 

எனக்கு இன்னமும் இந்தத் தகவலை நம்ப முடியவில்லை உண்மையாகவும் இருக்கலாம் பயணங்கள் எதையாவது நமக்குப் புதுசா சொல்லும் அது பழசா இருந்தாலும்